இலங்கை மத்திய வங்கி ஊழல், மோசடி தொடர்பான விசாரணையை நிறைவு செய்து அதன் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ள கோப் குழு, மேலும் 450 நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோல், விசாரணை நிறைவு செய்யப்பட்ட 34 நிறுவனங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை டிசம்பர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இது குறித்து கோப் குழுத் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி கூறுகையில்;
“18 மாதங்களாக மிகவும் சிரமப்பட்டு மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடியைக் கண்டுபிடித்துள்ளோம்.
இது தொடர்பான எமது கோப் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குற்றவாளிகளைத் தப்பிக்க விடக்கூடாது.
மக்களின் கோடிக்கணக்கான பணம் மத்திய வங்கியில் மோசடி செய்யப்பட்டுள்ளது. அதனால், இந்த அறிக்கையை அலட்சியம் செய்ய நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
அதேபோல், இன்னும் 34 நிறுவனங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகள் டிசம்பர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும். மேலும், 450 நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன” எனவும் தெரிவிக்கப்படுகின்றது.