செப்டெம்பர் 26ம் திகதி முதல் “தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்”…

2018 செப்டெம்பர் 26ம் திகதி முதல் ஒக்டோபர் 2ம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

டெங்குகள் அற்ற நாடு என்ற தொனிப்பொருளில் இந்தவாரம் அனுஷ்டிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக இலங்கை முழுவதும் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு இடம்பெறவுள்ளதாக டெங்கு தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் ஹசித திசேரா தெரிவித்தார்.

2017 ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. இருப்பினும் தற்பொழுது நிலவும் பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக அடுத்துவரும் 3 மாதங்களுக்குள் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய அபாயம் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“தகவல் தருவோம் தடுப்போம் டெங்கு நோய்க்கு எதிரான யுத்தம்” எனும் தொனிப்பொருளின் கீழ் DengueFreeChild எனும் எப் மூலம் பாடசாலைகளில் டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் ஒரு மணித்தியாலம் பாடசாலை சுற்றுசூழலை சுத்தம் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் எனவும், சனிக்கிழமைகளில் கட்டிட மற்றும் நிர்மாண பணிகளை மேற்கொள்ளும் இடங்களில் பொலிஸ், முப்படை சிவில் பாதுகாப்பு அணி, சமூக சுகாதார பாதுகாப்பு குழு அங்கத்தவர்கள் அடங்கலாக சுமார் 6000 பேர் இதற்கு பங்களிப்பு செய்யவுள்ளனர். கிராம மட்டத்தில் கிராம உத்தியோகஸ்தர்கள் அபிவிருத்தி அதிகாரிகள் உள்ளிட்டோரின் ஒத்துழைப்பும் இதற்காக பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.