செயலிழந்துள்ள நுரைச்சோலை மின்பிறப்பாக்க இயந்திரம் குறித்த அறிக்கை இன்று சமர்ப்பிப்பு.

செயலிழந்துள்ள நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்க இயந்திரத்தைப் பரிசோதிப்பதற்காக இலங்கை வந்துள்ள சீன விசேட நிபுணர்களின் அறிக்கை இன்று(22) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த அறிக்கை மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் சக்தி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அறிக்கை கிடைத்தவுடன் மின் பிறப்பாக்க இயந்திரத்தின் திருத்த வேலைகள் தொடர்பில் அடுத்தகட்ட தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டார்.

செயலிழந்துள்ள முதலாவது பிறப்பாக்க இயந்திரத்தின் திருத்த வேலைகள் ஏலவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த இயந்திரம் தொடர்பாக ஆராய்ந்து இன்றைய தினத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்பதுடன், அதன் பின்னரே குறிப்பிட்ட மின் பிறப்பாக்க இயந்திரத்தை திருத்துவதற்கான செலவீனத்தை இலங்கை மின்சார சபையா அல்லது சம்பந்தப்பட்ட சீன நிறுவனமா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.