சைட்டத்திற்கு தொடர்ந்தும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.. வதந்திகளை நம்ப வேண்டாம் – சைட்டம் நிர்வாகம்…

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு தொடர்ந்தும் மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு புதிய கல்வி ஆண்டுக்காக மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டு வருவதாக மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் பதிவாளர் ஹஸ்னி குசைன் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் சேர்ப்பதனை நிறுத்துமாறு அரசாங்கம் இதுவரையில் தனியார் பல்கலைக்கழகத்திற்கு அறிவிக்கவில்லை என தெரிவித்துள்ள அவர் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் வழமை போன்று இந்த ஆண்டிலும் மாணவர்கள் சேர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தமது பல்கலைக்கழகத்தில் அனைத்து விடயங்களும் சிறந்த முறையில் நடைபெறுவதாகவும், அரச பல்கலைக்கழகங்களிலேயே உரிய முறையில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ள ஹஸ்னி குசைன் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதுடன் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் இறுதி தீர்ப்பிற்காக காத்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அரசு வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்கள் புதிதாக உள்ளீர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

(rizmira)