மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி விவகாரம் தொடர்பில் அரசு எடுத்துள்ள தீர்மானம் நிபந்தனைகளுடனான வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் உறுதிப்படுத்தப்படும் வரை தங்களது வழமையான புது மாணவர் அனுமதிகளும் பட்டமளிப்பும் தொடர்ந்து நடைபெறும் என குறித்த கல்லூரியின் தலைவர் டாக்டர் நெவில் பெர்னாந்து தெரிவித்துள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக அவர் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ. அபேகோனுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் டாக்டர் நெவில் பெர்னாந்து கருத்து தெரிவிக்கையில்;
“..பட்டமளிப்பொன்றை வர்த்தமானி அறிவித்தலின் மூலம் மாத்திரம் தடுத்து நிறுத்த முடியாது. அதற்கு வேறு பல வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
எனது கல்லூரியின் புது மாணவர் அனுமதியையும் பட்டமளிப்பையும் நிறுத்துமாறு அமைச்சரவைப் பத்திரம் ஒன்று வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது எனக்குத் தெரியாது. அதுபற்றி எனக்கு இதுவரை எந்தவித அறிவிப்பும் தரப்படவில்லை.
இலங்கை மருத்துவர் சங்கமும் மருத்துவ சபையும் இணைந்தே சைட்டத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி வருகின்றன. அப்பாவி மாணவர்களைத் தூண்டிவிட்டு கலகம் செய்கிறார்கள்.
வைத்தியர்களின் சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தி அவர்களது சொத்துகளை அரசுடமையாக்க வேண்டும் என நான் அரசிடம் கோரிக்கை விடுக்கின்றேன்…” என சைட்டம் தலைவர் டாக்டர் நெவில் பெர்னாந்து தெரிவித்துள்ளார்.