சைட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு புதிய தீர்வுகளை உள்ளடக்கி, விசேட அறிக்கை ஒன்றினை கடந்த 28ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுப்பதாக அறிவித்திருந்த நிலையில், அதுகுறித்து இதுவரையில் அறிவிப்பு எதனையும் ஜனாதிபதி விடுக்காமையால் தொழிற்சங்கப் போராட்டம் நடத்துவதனை ஒருபோதும் தவிர்க்க முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
மேலும் சைட்டம் தொடர்பில் அரசு ஆதரவு காட்டி வரும் அசமந்த போக்கை கண்டித்து இரவு பகல் பாராது கொழும்பில் போராட்டம், பேரணிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.
தொழில்சார் நிபுணர்களின் கேட்போர் கூடத்தில் நேற்று(30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
“..அரசாங்கம் சைட்டம் தொடர்பில் முறையான அறிவிப்பை விடுக்கும் வரையிலும் எமது போராட்டம் தொடரவுள்ளது. நாம் தேவையில்லாமல் தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபடுவதாக கூறுகின்றனர். அவ்வாறான சூழ்நிலையை அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுக்கின்றது. எமது கோரிக்கைகளுக்காக அரசாங்கத்தின் பின்னால் தொடர்ந்தும் வலிந்து செல்ல முடியாது..” என்றார்.
(rizmira)