சைப்ரஸ் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற நிகோஸ் அனஸ்டசியடெஸ் அந்நாட்டின் ஜனாதிபதியாக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி ஏற்க உள்ளார்.
சைப்ரஸ் நாட்டின் ஜனாதிபதியாக நிகோஸ் அனஸ்டசியடெஸ் கடந்த 2013-ம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் பதவி வகித்து வருகிறார். இவரது ஐந்தாண்டு பதவிக்காலம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.
இத்தேர்தலில் குடியரசு முன்னணி கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதியான நிகோஸ் அனஸ்டசியடெஸ் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து இடதுசாரிகளின் ஆதரவுடன் ஸ்டாவ்ரோஸ் மலாஸ் போட்டியிட்டார்.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே நிகோஸ் அனஸ்டசியடெஸ் முன்னிலை வகித்து வந்தார். முடிவில் நிகோஸ் அனஸ்டசியடெஸ் 56 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதன்மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக சைப்ரஸ் நாட்டின் ஜனாதிபதியாக நிகோஸ் அனஸ்டசியடெஸ் எதிர்வரும் 28 ஆம் திகதி பதவி ஏற்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.