‘சைலன்ஸ் இன் த கோட்’ திரைப்படத்தின் இடைக்காலத் தடை நீடிப்பு.

பிரசன்ன விதானகேவின் சைலன்ஸ் இன் த கோட் (Silence in the Courts) என்ற ஆவணத் திரைப்படத்தை வௌியிட, விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இரு பெண்கள் நீதிபதி ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு, இந்தத் ஆவணத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த ஆவணத் திரைப்படத்தின் மூலம் தான் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இயக்குனர் கூற முற்பட்டுள்ளதாகவும், நாளை குறித்த திரைப்படத்தை காட்சிப்படுத்தத் தயாராகி வருவதாகவும், முன்னாள் நீதியரசர் லெனின் ரத்நாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த 5ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சம்பந்தப்பட்ட ஆவணத் திரைப்படத்தை வௌியிட, இன்று வரை(19ம் திகதி) நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

பிரசன்ன விதானகே உள்ளிட்ட எட்டுப் பேரை பிரதிவாதிகளாக பெயரிட்டு முன்னாள் நீதிபதி லெனின் ரத்நாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதேவேளை இது தொடர்பில் பிரசன்ன விதானகே தரப்பில் ஆஜரான சட்டத்தரணி குறித்த இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு கோரினார்.

எனினும் லெனின் ரத்நாயக்க தரப்பால் குறித்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மாவட்ட நீதிபதி எம்.ஏ.குணவர்த்தன இந்த வழக்கை நாளை வரை ஒத்திவைத்துள்ளார்.