கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட கொழும்பு 07ல் அமையப்பெற்றுள்ள அதிசொகுதி கட்டிடத்தில் இருந்த சொத்துக்களை முறையற்ற விதத்தில் துஷ்பிரயோகம் செய்ததாக முன்னாள் உயர் கல்வி அமைச்சரும், தற்போதைய அமைச்சருமான எஸ்.பீ. திஸாநாயக்க மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், குறித்த குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தாது பொலிஸார் மௌம் காத்துவருவதாக பல்கலைக்கழக மாணவர் தரப்பு குற்றஞ்சாட்டுகிறது.
இதுகுறித்த வழக்கு நேற்று (04) கொழும்பு நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது. சொத்துக்கள் திருடப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டில் அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க சந்தேக நபரா? இல்லையா? என்பது குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் கடந்த வழக்கு விசாரணையின் போது பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
எனினும், இதற்கான உரிய பதிலை பொலிஸார் நீதிமன்றத்திற்கு நேற்று (04) வழங்கவில்லை. குறித்த சம்பவத்தின் அறிக்கையை சட்டமா அதிபருக்கு சமர்ப்பித்துள்ளதாகவும், அவரின் ஆலோசனைக்காக காத்திருப்பதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.
அத்துடன், குறித்த வழக்கின் சந்தேக நபர் யார் என்பதை குறிப்பிட வேண்டும் என அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க சார்பாக முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் கேட்டுக்கொண்டார்.
காரணம், வெளியே அமைச்சர் தான் சந்தேக நபர் என வதந்தி பரவிச் செல்வதாகவும் எனவே சந்தேக நபரைப் பெயரிட வேண்டும் எனவும் சட்டத்தரணி கேட்டுக்கொண்டார்.