ஜனநாயக தேர்தலுக்கு இலங்கை மிகப்பொருத்தமான நாடு

ஜனநாயக செயற்பாடுகளை மேற்கொள்ளவும்  சிறப்பானதொரு தேர்தலை முன்னெடுக்கவும் இலங்கை சிறந்த இடமாக அமைந்துள்ளதாக பொதுநலவாயத்தினால் இலங்கையின் தேர்தலை கண்காணிக்க அனுப்பிவைக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர்கள் குழுவை சேர்ந்தவரும் மால்டா நாட்டின் முன்னாள் ஜனாதிபதியுமான எச்.ஈ.ஜோர்ஜ் அபேலா தெரிவித்தார்.

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று பதன்கிழமை(12) இடம்பெற்ற, இலங்கையின் பொதுத்தேர்தல் தொடர்பான தமது கண்காணிப்பு நடவடிக்கைகள் பற்றி விளக்கமளிக்கும் முகமாக விஷேட செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் இக்கருத்தினை கூறினார்.

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொதுநலவாய அமையத்தின் பொதுச்செயலாளர் கமலேஷ் சர்மாவினால் நாங்கள் இங்கு அனுப்பி வைக்கப்பட்டோம்.

நாடு முழுவதும் பயணம் செய்த நாங்கள் நேரில் கண்டவற்றையும் பொதுமக்கள், அரசியல்கட்சிகள், சிவில் அமைப்புகள், பொலிஸார் ஆகியோருடனான சந்திப்பு, மற்றும் தேர்தல் தொடர்பில் கண்காணிக்கப்பட்ட விடயங்களை பொதுநலவாய அமையத்தின் பொதுச்செயலாளருக்கு அறிக்கையாக அனுப்பி வைப்போம். பின்னர் அவர் பூரணமான உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிடுவார்.

இலங்கை தீவானது மிகவும் அழகிய, அமைதியான நாடாக திகழ்வதுடன் ஜனநாயக செயன்முறைகளை முன்னெடுக்க சிறப்பான இடமாகவும் உள்ளதை எம்மால் அவதானிக்க கூடியதாக இருந்தது.

இந்த கண்காணிப்பு பணிகளுக்காக, இலங்கை உட்பட 53 நாடுகள் அங்கம் வகிக்கும் பொதுநலவாய அமையத்தினால் 9 பேர் கொண்ட குழுவினர் இங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

(riz)