ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் நிதி மற்றும் வரி தொடர்பிலான தீர்மானங்களை ஆராய விசேட குழு

நிதி விவகாரங்கள் மற்றும் மத்திய வங்கியுடன் தொடர்பான விடயங்களில் தீர்மானங்களை முன்னெடுக்கும் போது தன்னையும், பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோரையும் உள்ளடக்கிய குழுவினூடா தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

சிங்கள, தமிழ் புத்தாண்டின் பின்னர் கூடிய முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கின்ற போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

இன்னும், நிதி தொடர்பான தீர்மானங்கள் கலந்துரையாடலின் பின்னர் மேற்கொள்ளப்படவேண்டிய ஒன்று எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களுக்கு சுமை ஏற்படும் வகையிலான வரிகளை அவர்கள் மீது சுமத்துவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 18 ஆம் திகதி பொலன்னறுவையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.