ஜனாதிபதியின் புன்னகையும் ரவூப் ஹக்கீமின் விமர்சனமும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கட்சி அரசியலில் விமர்சனங்கள் என்பது பொதுவானதொரு விடயம். ஆளும் கட்சியை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதும் எதிர்க்கட்சிகளை ஆளும் கட்சி விமர்சிப்பதும் பொதுவானதே.

ஆனால் அதற்கு அப்பால் உள்ள அரசியலை புரிந்துக்கொண்டால் மக்கள் ஒருபோதும் அரசியலுக்காக பிளவுப்பட மாட்டார்கள்.

இலங்கையின் தேசிய அரசியலில் தற்போது திரைக்கு பின்னால் நடக்கும் அரசியல் சம்பவங்களை பார்க்கும் போது அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்பது உண்மையாகின்றது.

காலி முகத்திடம் போராட்டம், கோட்டாபய ராஜபக்ஷ தப்பியோட்டம் மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பு என வரிசையாக நடந்தேறிய அரசியல் சம்பவங்களின் தொடர்ச்சி இன்றும் முடிவடைந்ததாக இல்லை என்பதற்கு  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காய் நகர்த்தல்கள் சாட்சி பகிர்கின்றன.

இடைக்கால வரவு – செலவு திட்டத்தை சமர்பித்ததன் பின்னர் இடம்பெற்ற விவாதங்களின் போது ஜனாதிபதி பாராளுமன்றத்திலேயே இருந்து அவற்றை அவதானித்து வந்தார்.

குறிப்பாக கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களிலுமே எதிர் தரப்பினர் முன் வைத்த விடயங்களை அவதானித்தார்.

பாராளுமன்றத்திலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ அலுவலகத்திற்குள்  ஆளும் கட்சி உறுப்பினர்களை விட எதிர்க்கட்சி உறுப்பினர்களே அதிகமாக காணப்பட்டனர்.

அவர்களுடன் எப்போதுமே ஆர்வத்துடன் உரையாடும் ஜனாதிபதியிடம் அடுக்கடி பாராளுமன்றத்தில் பிரசன்னமாவதற்கான காரணத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வினாவினர்.

பாராளுமன்றத்திற்கும் நிறைவேற்று அதிகாரத்திற்குமான உறவு வலுவாக காணப்பட வேண்டுமாயின்   ஜனாதிபதி அடுக்கடி பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்ய வேண்டும்.

ஆளும் கட்சி உறுப்பினர்களை மாத்திரல்ல எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாட வேண்டும் என தன்னை சந்திக்க வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

ஜே.ஆர் ஜயவர்தன தனது ஆட்சி காலத்தில் அதிக தடவைகள் பாராளுமன்றத்திற்கு வருவதும் அனைத்து உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். நிறைவேற்று அதிகாரம் மற்றும் பாராளுமன்றத்திற்குமான உறவை அவர் வலுப்படுத்தினார்.

அதுவொரு சிறந்த முன்னுதாரணம் என குறிப்பிட்ட ஜனாதிபதி, தன்னை சந்திக்க வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பை நிறை செய்துக்கொண்டு, இடைக்கால வரவு – செலவு திட்ட விவாதத்தில் தனது அலுவலக அறையிலுள்ள தொலைக்காட்சியில் ஊடாக அவதானம் செலுத்தினார்.

இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காரங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கிம் கடுமையாக அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் விமர்சித்து உரையாற்றினார்.

‘பயங்கரவாத தடைச் சட்டத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தி தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது ஜனாதிபதி எதிர்பார்க்கும் நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கொள்கைக்கு முரணானது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் மீது பின்தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக சர்வதேசத்திற்கு வழங்கும் செய்தி என்ன? எனவே ஜனாதிபதி இந்தப் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்’ என விரமர்சித்து இதன் போது ரவூப் ஹக்கிம் உரையாற்றினார்.

ஹக்கின் உரையை புன்னகையுடன் செவிமெடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறைக்குள் வந்த இணைப்பு அதிகாரியொருவர் தகவல் ஒன்றை வழங்குவதற்காக காத்திருந்தார். அதாவது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தங்களை சந்திக்க வந்திருப்பதாக இணைப்பு அதிகாரி கூறினார்.  புன்னகையுடனனேயே அனுமதி வழங்கினார் ஜனாதிபதி.

இதன் பின்னர் ஜனாதிபதியை சந்திக்க மேலும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வந்தனர். சர்வக்கட்சி அரசாங்கம் குறித்து வினாவினர். பிரதான எதிர்க்கட்சி உட்பட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து அரசியல் கட்சிகளும் சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணையும் என்ற நம்பிக்கை உள்ளது. எவ்வாறாயினும் அடுத்த வாரத்தில் இராஜாங்க அமைச்சுக்களை வழங்க  தீர்மானித்து உள்ளதாக ஜனாதிபதி பதிலளித்தார்.