வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம தேவாலயத்தின் எசல மகோற்சவத்தின் 06 வது நாள் பெரஹரா நேற்று (10) இரவு வீதி உலா வந்ததுடன், ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனவும் கதிர்காம புண்ணிய தலத்திற்குச் சென்று மதக் கிரியைகளில் ஈடுபட்டார்.
எசல மகோற்சவத்தின் 06வது நாள் சம்பிரதாய நிகழ்வுகள் பல கதிர்காம புண்ணிய பூமியில் இடம்பெற்றதுடன், பந்தல் கட்டுதல், துட்டகைமுனு அரசனின் காலம்தொட்டு தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும் பஸ்நாயக்க உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் உள்ள சாணம் பூசப்பட்ட நிலத்தில் நடாத்தப்படும்
தான பூஜை மற்றும் துட்டகைமுனு அரசனுக்குச் சொந்தமான யானைத் தந்தங்களை மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தல் போன்ற சம்பிரதாயங்கள் நிறைவேற்றப்பட்டன.
நேற்று பிற்பகல் வரலாற்று பிரசித்திப்பெற்ற கதிர்காம புண்ணிய பூமிக்குச் சென்ற ஜனாதிபதி, கிரிவேஹெர ரஜமஹா விகாராதிபதி சங்கைக்குரிய கொபவக தம்மிந்த தேரரை சந்தித்து நலன் விசாரித்து பரிசுப் பொருட்களை பூஜை செய்தார்.
இதனைத் தொடர்ந்து கிரிவேஹெரவில் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
புராதன கிரி விகாரையில் மதக் கிரியைகள் நிறைவேற்றியதன் பின்னர் கதிர்காம மகா தேவாலயத்தில் இடம்பெற்ற தேவ பூஜையில் கலந்துகொண்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
இந்தியாவின் திருப்பதி கோவிலின் தலைவர் Chadalawada Krishnamurthi அவர்களும் நேற்றைய எசல பெரஹராவை கண்டுகளித்தார்.
அமைச்சர்களான தயா கமகே, விஜித் விஜயமுனி த சொய்சா, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் நிலுகா ஏக்கநாயக்க, ஊவா மாகாண கருத்திட்டப் பணிப்பாளர், முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.