பிரபல ஜனாதிபதி சட்டத்தரணி இரத்தினவடிவேல் சுரேந்திரன் நேற்று திங்கட்கிழமை அதிகாலையில் காலமானார். கொழும்பு விவேகானந்த சபையின் தலைவராகவும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை உறுப்பினராகவும் விளங்கிய சுரேந்திரன், சட்டத் தொழிலில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தைப்பெற்ற பெருமைக்குரியவர். அமரர் ஆறுமுகம் இரத்தினவடிவேல் தம்பதிகளின் மூத்த மகனும், அமரர் சட்டத்தரணி வேலுப்பிள்ளை முருகேசு தம்பதிகளின் மருமகனுமாவார்.
திருமதி ரேணுகாதேவியின் (பாலர் பாடசாலை அதிபர்) அன்புக் கணவரும், பிரசாந்தன், பவித்திரா, காலஞ்சென்ற பிரதர்சனி ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.
பிரசெல்ஸ் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சட்டங்களில் முதுமாணிப்பட்டம் பெற்ற சுரேந்திரன், இலண்டன் பல்கலைக்கழகத்தில் உயர் சட்ட ஆராய்ச்சிப்பீடத்தில் ஆராய்ச்சி செய்திருப்ப துடன், ஐக்கிய நாடுகள் சட்டபீடத்தில் சர்வதேச வர்த்தக சட்டத்தில் பயிற்சியும் பெற்றிருக்கிறார்.
2004 இல் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார். இலங்கைச் சட்டக் கல்லூரியில் பரீட்சகராகவும் இருந்த இவர் வெளிநாடுகளிலும், இலங்கையிலும் நடந்த பல சட்ட மாநாடுகளிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் விரிவுரைகளும் நிகழ்த்தியுள்ளார். காணி மோசடி மற்றும் தேசவழமைச் சட்ட சீர்திருத்தக்குழு அங்கத்தவராகவும், இலங்கை சட்டத்தரணிகள் சபைச் சட்டக்குழுவின் தலைவராகவும் இருந்தார்.
யாழ்.மத்திய கல்லூரியின் புகழ்பூத்த பழைய மாணவரான இவர், அக்கல்லூரியின் மாணவ தலைவராக இருந்ததுடன் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையே நடந்த ஆங்கிலதினப் போட்டி யிலும் முதற்பரிசு பெற்றவர்.
பூதவுடல் அன்னாரின் கொள்ளுப்பிட்டி கார்வில்ஸ் பிளேஸ் இல.12 இல் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப் பட்டு, நாளை புதன்கிழமை மதியம் 12 மணிக்கு கனத்தை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு 12.30 மணியளவில் தகனக்கிரியைகள் இடம்பெறும்.