இலங்கை கடற்படைக்கு ஜப்பானின் உதவியை பெற்றுக் கொள்வது தொடர்பாக, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று(21) சந்திக்கவுள்ளதோடு, இலங்கை கடற்படைக்கான ஜப்பானின் உதவிகள் குறித்து விவாதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து சீனாவிற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செல்லவும் திட்டமிட்டுள்ளார்.
மேலும், ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர், ஜப்பான் – இலங்கை பாதுகாப்பு ஆலோசனைகள் குறித்து இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தனவுடன் கலந்துரையாடவுள்ளதோடு, அரச உயர் மட்ட தலைவர்களுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயமானது, இரு நாட்டிற்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு உறுதுணையாக அமையும் என எதிர்பார்ப்பதாக ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.