நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் துருக்கி நாட்டின் தூதுவர் ஸ்கென்டர் கெமல் ஒகேயிக்கும் (Iskender Kemal Okyay) இடையிலான சந்திப்பொன்று நேற்று (04) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி துருக்கிக்கும் எமது நாட்டுக்குமிடையிலான பரஸ்பர சிநேகிதத் தொடர்பு குறித்து மிகுந்த திருப்தி தெரிவித்துள்ளார். அத்துடன் எமது நாடு சார்பாக
துருக்கிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அவ்வாறான மிகவும் தரமான சேவைகளை துருக்கி அரசாங்கம் எமது நாட்டுக்கு வழங்கியுள்ளது.
அத்துடன் மன்னார் பிரதேசத்தில் தற்போது வழங்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டு வரும் 100 வீட்டுத்திட்டங்கள் துருக்கி அரசாங்கத்தின் பங்களிப்பில் மேற்கொள்ளப்பட்டதொன்றாகும் எனவும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.
மேலும், இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த தூதுவர், ஐரோப்பிய யூனியனின் பங்களிப்புடன் துருக்கி அரசாங்கம் மேலும் பல கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் துருக்கியன் கட்டுமான கம்பனியொன்று கொழும்பில் ஐக்கிய அமெரிக்காவுக்கான தூதரகம் அமைக்கும் பணியில் சிறந்த கட்டுமானத்திற்கான விருதினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது எனவும் இவ்விடத்தில் தூதுவர் நினைவு கூர்ந்தார்.
அத்துடன் இவ்வளவு காலமும் துருக்கிக்கும் எமது நாட்டுக்கும் இடையில் சிறந்த பாலமாக விளங்கி இரு நாட்டு பரஸ்பர தொடர்புகளை நல்ல முறையில் பேணி வந்த உங்களுக்கு அரசு சார்பிலும் மக்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துருக்கியின் தூதுவருக்கு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட தூதுவர், துருக்கி அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை துருக்கிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தார். இவ்வழைப்பிதழை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி இன்டர் பாராளுமன்ற ஒன்றியத்தின் (Inter Parliamentary Union (IPU)) இலங்கைப்பிரதிகளின் அங்கத்துவராக இருந்த காலத்தில் 1996 ஆம் ஆண்டில் துருக்கிக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பிலும் நினைவு கூர்ந்தமையும் இங்கு விசேட அம்சமாகும்.
(riz)