ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சொத்து மதிப்பு தகவலை பெற மீளவும் மேன்முறையீடு செய்யவுள்ளதாக ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு (Transparency international)தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது புதிதாக கொண்டு வரப்பட்ட தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் மூலம் குறித்த அமைப்பானது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சொத்து விபரத்தினை கோரியிருந்தது.
இந்நிலையில் அவர்களின் சொத்து பொறுப்பு விபரங்களை பெற்றுக் கொள்ள முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் அடிப்படையில் இந்த விபரங்களை பெற்றுக் கொள்ள உரிமை உண்டு என கூறிய அந்த அமைப்பு, இந்த செயற்பாடு காரணமாக அந்த உரிமைக்கு மதிப்பு தற்போது இழக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும் இவர்களின் தகவல்களை பெற்றுக் கொள்ள மீளவும் மேன்முறையீடு செய்ய உள்ளதாக அந்த அமைப்பின் முகாமையாளர் சங்கீதா குணரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.