ஜனாதிபதி மற்றும் மலேஷிய பிரதமரிற்கும் இடையில் இன்று சந்திப்பு…

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று(17) மலேஷியப் பிரதமர் இலங்கையை வந்தடைந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மலேஷிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரசாகிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு வந்துள்ளதாக, வௌிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

விஞ்ஞான தொழில்நுட்பம், புதிய உற்பத்திக்கான உடன்படிக்கை ஆகியன தொடர்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.

இந்த உடன்படிக்கையின் மூலம் பொருளாதார அபிவிருத்தி மற்றும் இராஜதந்திர பயிற்சிகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளன.

மலேஷியா மற்றும் இலங்கைக்கு இடையிலான, இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு, 60 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு விசேட முத்திரை ஒன்றும், கடித உறையொன்றும் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், மலேஷிய பிரதமர் இலங்கை முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் வட்டமேசை பேச்சுவார்த்தையிலும் பங்குகொள்ளவுள்ளார்.