(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட நிலையில், போராட்டகாரர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்த ஒரு கோடியே 78 லட்சம் ரூபா பணத்தை பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று கையளித்துள்ளனர்.
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் பொலிஸார் இந்த பணத்தை ஒப்படைத்துள்ளனர். இந்த பணம் நீதிமன்றத்தில் கையளிக்கப்படுவது மூன்று வாரங்களுக்கு மேல் தாமதமானது சம்பந்தமாக உடனடியாக நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதவான், இதன் போது பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
போராட்டகாரர்கள் இந்த பணத்தை ஒப்படைத்து மூன்று வாரங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், கோட்டை பொலிஸார், அது தொடர்பாக அறிக்கையையோ, பணத்தையோ நீதிமன்றத்தில் ஒப்படைக்காது குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அரசகுலரத்ன, நேற்று நீதிமன்றத்தில் முறைப்பாட்டை முன்வைத்திருந்தார்.
இதனையடுத்து அந்த பணத்தை உடனடியாக நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.
இதனடிப்படையில், இன்று அந்த பணத்தை பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளது.