ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணம் குறித்து நீதிமன்ற அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட பணத்தை உடனடியாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவினால் இந்தப் பணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் எண்ணிக் கையளித்த 17.8 மில்லியன் ரூபா பணம் குறித்து நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரிடம் பணம் கையளிக்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை பணம் தொடர்பான அறிக்கை எதுவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என கோட்டை நீதவான் திலின கமகே தெரிவித்துள்ளார்.

உடனடியாக குறித்த பணத்தை முன்னிலைப்படுத்துமாறு கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்ட நீதிவான், பணம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்