ஜனாதிபதி மீது ஒழுக்காற்று நடவடிக்கை அவசியம் – சனத் நிசாந்த

எங்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாது, அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுமானால் முதலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதே எடுக்க வேண்டும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமாயின் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிலும் முக்கியமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதே முதலில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு ஜக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிட்டவர் அவரே என சனத் நிசாந்த குற்றம் சுமத்தினார்.

இவ்வாறு எல்லாத் தவறுகளையும் அவர்களே செய்துவிட்டு தற்போது ஒன்றும் செய்யாததைப் போல் மற்றவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கச் சொல்வது எந்தவகையில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தற்போது உள்ள நிலைமைக்கு கட்சி உறுப்பினர்களே காரணமாக உள்ளார்கள். கட்சியின் தோல்விக்கும் இவர்களே காரணமாவார்கள்.

கடந்த தேர்தலின் போது சு.கட்சி வெற்றியடைந்தாலும் தோல்வியடைந்தாலும் பிரதமர் பதவி சு.கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்படாது என பகிரங்கமாக தெரிவித்திருந்தார்கள்.

இந்தக் கூற்று கட்சி உறுப்பினர்களின் மனதை வெகுவாக பாதித்திருந்தது எனவும் சுட்டிக்காட்டினார்.

அன்று அவ்வாறு கூறியவர்களே தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோடு வாருங்கள் என பகிரங்க அழைப்பு விடுக்கின்றார்கள் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த இதன்போது தெரிவித்தார்.