ஜல்லிக்கட்டு மற்றும் கம்பளா போட்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டமையினை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.
பீட்டா அமைப்பை சேர்ந்த மணிலால் வல்லியாட்டே என்பவர் இதனை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்களில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கக் கோரி, கடந்த மாதம் தமிழகம் முழுவதும் பாரிய போராட்டம் வெடித்தது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழர்கள் வாழும் நாடுகளிலும் போராட்டம் இடம்பெற்றன. இதனையடுத்து, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் தமிழக சட்டசபையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தைத் தொடர்ந்து கர்நாடகத்தில் கம்பளா என்ற பாரம்பரிய விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டங்கள் வெடித்தன. இதன் காரணமாக, அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு குறித்த மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக தடை விதிக்க கோரி வழக்கு தாக்கல் செய்திருந்த பீட்டா அமைப்பு தொடர்ந்து மௌனம் காத்து வந்தது.
இந்நிலையில், தற்போது ஜல்லிக்கட்டு மற்றும் கம்பளா போட்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.