ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட இருவர் பலி…

தமிழ்நாட்டில் இன்று(22) இடம் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட ஒருவர் பலியாகியுள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை ராப்பூசல் கிராமத்தில் வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.

ராப்பூசலில் பாதுகாப்பு மற்றும் கவனக் குறைவால் நடத்தப்பட்ட அவசரக் கோல ஜல்லிக்கட்டில் இந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. கீரனூர் லெட்சுமணப்பட்டி மாடுபிடி வீரரான மோகன்(30), காளை முட்டியதால் படுகாயம் அடைந்த நிலையில், கீரனூர் அரச வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மதுரை தமுக்கம் மைதானத்தில் சல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சந்திரமோகன் (வயது 48) மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சந்திரமோகன், மதுரை ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்தவர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகத்தில் கடந்த பல நாட்களாக போராட்டம் நடைபெறுவதுடன், இலங்கை உட்பட பல நாடுகளிலும் அவர்களுக்கு ஆதரவாக தமிழர்கள் ​போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், இன்று இடம்பெற்ற இந்த இரண்டு உயிரிழப்புகள், மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.