ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தை மீள் பெற ஜேர்மன் அரசு ஆதரவு – ஹர்ஷ

ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தை மீளவும் பெற்றுக்கொள்ள ஜேர்மன் அரசாங்கம் ஆதரவளித்துள்ளது என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்;

இலங்கைக்கு மீளவும் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளன.

எதிர்வரும் நாட்களில் இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விண்ணப்பம் சமர்ப்பித்து எட்டு மாதத்திற்குள் சலுகைத் திட்டம் வழங்குவது குறித்த இறுதித் தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் அறிவிக்கும்.

இதற்கு முன்னதாக சலுகைத் திட்டம் பெற்றுக் கொள்ளப்பட்ட போது ஐரோப்பிய நாடாளுமன்றின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கவில்லை.

எனினும் தற்போது ஐரோப்பிய நாடாளுமன்றின் அனுமதியையும் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, சலுகைத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள ஜேர்மனிய அரசாங்கத்தின் ஆதரவு எமக்கு பெரும் சக்தியாக அமையும் என ஹர்ஸ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்