(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –றாகமையிலிருக்கும் மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்திருக்கும் பள்ளிவாசல் கட்டிடத்தில் சிறைச்சாலை அதிகாரிகளால் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் மஹர சிறைச்சாலை அதிகாரிகள், பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் இப்பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக மக்கள் வருவதை தடை செய்துள்ளனர்.

பின்னர், பள்ளிவாசலை சுத்தம் செய்யவோ அல்லது பொருட்களை எடுப்பதற்கோ கூட எவருக்கும் அனுமதி கொடுக்கவில்லை.
இந்த நிலையில் குறித்த பள்ளிவாசல் கட்டிடம், சிறைச்சாலை அதிகாரிகளால் புனரமைக்கப்பட்டு ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு உள்ளே புத்தர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த பள்ளிவாசல் சுமார் 100 வருடங்கள் பழமையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த செயற்பாடு சிறுபான்மை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
