தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அமரர் ஜெயலலிதா ஜெயராமின் மரணம் குறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க, இந்தியப் புலனாய்வுத் துறைக்கு (சி.பி.ஐ) அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க கோரி, சசிகலா புஷ்பா எம்.பி. மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த புகார் மனுவை கடந்த டிசம்பர் மாதம் 19-ம் திகதி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து சசிகலா புஷ்பா அளித்தார்.
இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் புகார் கடிதத்தை சி.பி.ஐ-க்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. மேலும் புகார் குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் சி.பி.ஐ-க்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.