பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விடுதலை பெற்றுத் தருமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சியம் பீடத்தின் கோட்டே பிரிவினரால், மீளவும் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரிவின் மகாநாயக்கர் கலாநிதி இத்தேபானே தம்மாலங்கார தேரரின் கையொப்பத்துடன் வெளியான கடிதத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்த குற்றத்தை உணர்ந்து திருந்தி வாழ்வதற்கு ஞானசார தேரர் உடன்பட்டுள்ளதாக அக்கடிதத்தில் மகாநாயக்க தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையில், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்திற்கு இணங்க எதிர்வரும் நத்தார் தினத்தில் விடுதலை செய்யப்படவுள்ள கைதிகளுடன் ஞானசார தேரருக்கும் விடுதலை வழங்குமாறு அக்கடிதத்தில் மகாநாயக்க தேரர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், ஞானசார தேரர் செய்த குற்றத்துக்கு அவரது தனிப்பட்ட நோக்கம் எதுவும் காரணமாக அமையவில்லையெனவும், இராணுவ புலனாய்வுத்துறை உறுப்பினர்களுக்காக ஏற்பட்ட உணர்வினால் நடந்த தவறு என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கின்போது, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக ஞானசாரர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி 6 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.