டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டம்…

பிரான்சில் டீசல் விலை உயர்வை எதிர்த்து நடைபெறும் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில் வன்முறைக்கு அடிபணிய மாட்டேன் என அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

டீசல் விலை உயர்வை எதிர்த்து பிரான்சில் கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு கருதி தலைநகர் பாரிசில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சாம்ஸ் எலிசீசை பொலிசார் நேற்று மூடினர். மேலும் அங்குவந்த பொதுமக்களை சோதனை செய்தனர்.

இதனால் பொலிசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, பிரான்ஸ் முழுவதும் 1,600 இடங்களில் இடம்பெற்ற போராட்டத்தில், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜென்டினா நாட்டுக்கு சென்றுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், வன்முறைக்கு நான் அடிபணிய மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.