டெங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 310 ஆக உயர்வு

இலங்கையில் டெங்கு நோயை பரப்பும் நுளம்புக்கு  எதிரான போராட்டம் பல்வேறு வகையிலும் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் மே மாதம் தொடக்கம் நோயாளர்களின் எண்ணிக்கையிலும் மரணங்களிலும் அதிகரிப்பை காண முடிகின்றது.
அரசு டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இவ் ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் இனங் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 15 ஆயிரத்தை கடந்துள்ளதோடு, அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு  எண்ணிக்கையும் 310 ஆக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் 12,498 நோயாளர்கள் இனம் காணப்பட்டனர். மே மாதம் தொடக்கம் ஜுலை வரையிலான மூன்று மாதங்கள் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடிகின்றது.

மே மாதத்தில் 15,886 பேரும், ஜுன் மாதத்தில் 24,978 பேரும், ஜுலை மாதத்தில் 29,055 பேரும், புதிதாக இனம் காணப்பட்டுள்ளதாக அரசு டெங்கு கட்டுப்பாட்டு பிரிவில் அறிக்கையிடப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் கூடுதலான நோயாளர்கள் இம் மாதத்தில் இனம் காணப்பட்டிருந்தாலும் முதலாம் வாரத்தில் – 9322 என காணப்பட்ட எண்ணிக்கை நான்காம் வாரத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதை காண முடிகின்றது.