(FASTNEWS | COLOMBO) – நாட்டில் நிலவிய பயங்கரவாத தாக்குதலினைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ள பறக்கும் விமானியில்லா விமானங்கள், ட்ரோன் கருவிகள் தடையை மீறி வான்பரப்பில் பறக்குமாயின் அவை சுட்டு வீழ்த்தப்படும் என இலங்கை விமானப்படைப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
“இலங்கை வான்பரப்பில், விமானியில்லா விமானங்கள், ட்ரோன் கருவிகள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் கருவிகள் பறக்க விடப்படுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இதனை யாரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
தடையை மீறிப் பறக்கும் ட்ரோன் கருவிகள், விமானியில்லா விமானங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்.” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.