தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரமானது அமைச்சரவையில் இன்று(02) சமர்ப்பிக்கப்பட உள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தகவல் அறிந்து கொள்ளும் சட்ட மூலத்தை அமுல்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தனர்.

இதனடிப்படையில் தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரமொன்று இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. இக்குறித்த பத்திரமானது தொடர்பாடல் அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இந்த சட்ட மூலம் தொடர்பில் சிரேஸ்ட சட்ட வல்லுனரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்ரமரட்ன விளக்கம் அளிக்க உள்ளார். இன்னும், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் உத்தேச சட்டம் எதிர்வரும் 2016ம் ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் நாடாளுமன்றில் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் உத்தேச சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முன்னதாக சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகளிடம் சமர்ப்பித்து அவர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு திருத்தங்களைச் செய்து அதன் பின்னர் நாடாளுமன்றிற்கு சமர்ப்பிக்க முடியும் என பிரதமரிடம் கோரியதாக ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.