தகவல் அறியும் சட்ட மூலத்தில் பல குறைகள் உள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவிப்பு

தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பில் பல முரண்பாடுகள் அரசியலமைப்பில் உள்ளதாக உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

இன்று(03) பாராளுமன்றம் கூடிய வேளையில் தகவலறியும் சட்டத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு பொருத்தமானது அல்ல என உயர்நீதிமன்றம் தெரியப்படுத்தியுள்ளதாக, சபாநாயகர் கரு ஜெயசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு பொருத்தமானதா என்பது குறித்து ஆராய்ந்து தெரியப்படுத்துமாறு கோரி, அதனை உயர்நீதிமன்றத்திடம் கையளித்திருந்தனர்.

இந்த சட்ட மூலத்தின் சில பகுதிகள் அரசியலமைப்புக்கு பொருத்தமானது அல்ல எனவும், அதனை நிறைவேற்ற வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று நிறைவேற்ற முடியும் எனவும் உயர் நீதிமன்றம் தெரியப்படுத்தியுள்ளது.

அத்துடன் பிரச்சினைக்குரிய பகுதிகளை நீக்கி விட்டு சாதாரணமான முறையில் பெரும்பான்மை வாக்குகளுடனும் குறித்த சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் எனவும், உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக, சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.