இலங்கையின் தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் Huawei நிறுவனத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
Huawei நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கிடையிலான குறித்த கலந்துரையாடலின் போது Huawei நிறுவனம் இலங்கையில் மேற்கொண்டு வரும் தகவல் தொழில்நுட்ப மேம்படுத்தல் முயற்சிகள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலின் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர், தகவல் தொழில்நுட்பம், தொடர்பாடல், டிஜிட்டல் உட்கட்டமைப்பு என்பன அரசாங்கத்தின் முக்கிய அபிவிருத்தி இலக்குகளாகும்.
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் இத்துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு நாங்கள் Huawei நிறுவனத்தை ஊக்குவிக்கின்றோம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள Huawei நிறுவனத்தின் தலைவர் யாஓ வெய்மின், இலங்கையின் கிராமப்புற தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் விடயங்களை மேம்படுத்தும் முயற்சிகளை தமது நிறுவனம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாணவர் சமூகத்தை தகவல் தொழில்நுட்பத்துறையில் ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை வரவேற்று கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.