தங்கப்பந்து என்று அழைக்கப்படும் ‘பலோன் டி’ஆர்’ விருதை 5 ஆவது முறையாக வென்று மெஸ்சியின் சாதனையை ரொனால்டோ சமன் செய்தார்.
சிறப்பாக விளையாடும் கால்பந்து வீரருக்கு, பிரான்ஸ் கால்பந்து மேகசின் சார்பில் ஆண்டுதோறும் பிபா தங்கப்பந்து என்றழைக்கப்படும் ‘பலோன் டி’ஆர்’ விருது வழங்கப்படும். இந்த விருதுக்கான வீரர் பத்திரிகையாளர்கள் குழுவால் தேர்வு செய்யப்படுவர். இந்த ஆண்டிற்கான 30 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலில் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் உட்பட 30 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்,
மெஸ்சி ஐந்து முறை இந்த விருதை பெற்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்கு முறை இந்த விருதை பெற்றுள்ளார். ரியல் மாட்ரிட் அணி இந்த ஆண்டு லா லிகா, சாம்பியன் லீக் டைட்டிலை வென்றுள்ளது.
இதற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ முக்கிய காரணமாக இருந்தார். இதனால் ரொனால்டோ இந்த ஆண்டிற்கான விருதை பெற்று மெஸ்சியின் சாதனையை சமன் செய்வார் என கூறப்பட்டு வந்தது.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்த விருது வழங்கும் விழா பிரான்ஸ் தலைநகரான பாரிசில் நேற்று(07) நடைபெற்றது. இதன்மூலம் ஐந்தாவது முறையாக இந்த விருதை வென்ற ரொனால்டோ மெஸ்சியின் சாதனையை சமன் செய்தார்.
அடுத்த இடத்தை லியோனல் மெஸ்சியும், மூன்றாவது இடத்தை நெய்மரும் பிடித்தனர். கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 10 ஆண்டுகளாக வழங்கப்பட்ட பலோன் டி’ஆர் விருதை மெஸ்சியும், ரொனால்டோவும் மாறி மாறி வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.