தந்தையின் விருப்பத்திற்கு அமைய கிராம சேவகராக பணியாற்றினேன்!- ஜனாதிபதி

மாவட்ட செயலாளர்கள் மற்றும் கிராம சேவகர்கள் நாட்டின் அபிவிருத்திக்காக பரந்துபட்ட சேவைகளை வழங்கி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற கிராம சேவகர்களுக்கு சமாதான நீதவான் பதவிக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் கலாசாரத்தில் கிராமத்தை அடிப்படையாக கொண்ட கிராமிய தலைவர்கள் தொடர்பில் எமக்கு வரலாற்று சிறப்புமிக்க பின்னணி உள்ளது.

சமூக வணிகமயமாக்கப்படுவதற்கு முன்னர், தொழிற்நுட்பம் வளராத காலத்தில் கிராமங்களில் ஐக்கியம், ஒழுக்கம் போன்ற மனித விழுமியங்களை கிராமத்தை அடிப்படையாக கொண்ட தலைவர்களே பாதுகாத்தனர்.

கிராமத்து விகாரையின் பிக்குகள், கிராம பாடசாலையின் அதிபர், கிராம மருத்துவர், கிராம விதானயார் ஆகிய சிலரே கிராமத்தை முழுமையாக வழிநடத்தினர்.

இவர்கள் கிராமங்களின் குணநலன்களையும் நல்லொழுக்கத்தையும் முழுமையாக பாதுகாத்தனர்.

எனது தந்தை கிராமத்து விதானயார். அவர் வகித்த அந்த பதவியில் ஒரு நாளாவது நான் இருக்க வேண்டும் என தந்தை விரும்பினார்.

தந்தையின் விருப்பத்திற்கு அமைய நான் கிராம சேவகர் பதவிக்கு விண்ணப்பித்தேன். ஆனாலும் சிறிது காலமே நான் கிராம சேவகராக பணியாற்றினேன் என்றார்.