(FASTNEWS | COLOMBO) – சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் கடன் பெறுவதற்காக தனியார் ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய சட்டம் அமுலாகவுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
“தொழில் மற்றும் சேவை வழங்கும் ஒப்பந்தங்கள் கொண்ட உரிமை சட்டமூலம்” என பெயரிடப்பட்டுள்ள குறித்த இந்த சட்டமூலம் ஊடாக தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டமூலத்தில் உள்ள 53 நடைமுறைகள் இரத்து செய்யப்படவுள்ளன.
இந்த புதிய சட்டமூலம் ஊடாக ஊதிய கட்டுப்பாடு, நிறுவனங்கள் சட்டம், கடைகள் மற்றும் அலுவலகங்கள் சட்டங்கள் இரத்து செய்யப்படவுள்ளது.
இதன்மூலம் ஊழியர்களின் சம்பளங்களை தீர்மானித்தல், மாதாந்த சம்பளம் கணக்கிடுதல், தனியார் துறைக்கான விடுமுறையை கட்டுப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பான உரிமை முதலாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலத்திற்கமைய, தனியார் பிரிவிற்கு போயா விடுமுறைகள் மாத்திரமே வழங்கப்படவுள்ளது.
சிங்கள, தமிழ் புத்தாண்டு விடுமுறை, புது வருட விடுமுறை, நத்தார் விடுமுறை போன்ற விடுமுறைகளை வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கும் உரிமையும் முதலாளிமாருக்கு வழங்கப்படவுள்ளது.
அத்துடன் பணி செய்யும் மணி நேரங்களை 8 இல் இருந்து 12ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பணியிடத்தில் 15க்கு குறைவாக ஊழியர்கள் இருப்பின் மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படாது. 50க்கும் அதிகமான ஊழியர்கள் பணி செய்தால் மாத்திரமே மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.