தபால் சேவையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண குழு நியமனம்..

தபால் சேவையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்று(27) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சேவை புறக்கணிப்பில் ஈடுபடும் தொழிற்சங்கங்களுடன் இன்று(28) பேச்சுவார்த்தையொன்று நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த பேச்சுவார்த்தைக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தபால் தொழிற்சங்க சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

தபால் சேவையாளர்கள் கடந்த 26 ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக சுமார் ஒரு லட்சம் அஞ்சல்கள் தேங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)