தபால் சேவை ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தில்..

தபால் சேவை ஊழியர்கள் விரைவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை இலங்கை தபால் சேவை சங்கம் மேற்கொண்டு வருவதாக அச்சங்கத்தின் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்தார்.

கொழும்பு கோட்டையிலுள்ள பிரதான தபால் காரியாலய கட்டடத்தை அரசாங்கம் கையகப்படுத்தவுள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கண்டி, நுவரெலியா, காலி மற்றும் கொழும்பு கோட்டை பிரதான தபால் காரியாலய கட்டடங்களை வெளிநாடுகளுக்கு வழங்குவதற்கு அரசு கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும் அதற்கெதிராக தபால் சேவை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். அதன் பிரதிபலனாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது குறித்த தபால் காரியாலயங்களின் கட்டடங்களை வெளிநாடுகளுக்கு வழங்குவதில்லை என அரசினால் தெரிவிக்கப்பட்டது.

எனினும், கடந்த 08ம் திகதி தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, கொழும்பு கோட்டை பிரதான தபால் காரியாலய கட்டடத்தை பிரதமர் அலுவலகத்தினால் கையகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)