தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரச வளங்களை பயன்படுத்துகிறது – கபே அமைப்பு

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் அரச வளங்களை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தி வருவதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

அதிகாரத்தில் இருந்த கட்சிகளுக்கு மாத்திரமே அரச வளங்களை பயன்படுத்துவது தொடர்பில் இதுவரை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வந்தன.

எனினும் இம்முறை தேர்தலில் 5 அரசியல் கட்சிகள் அரச வளங்களை தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக தவறாக பயன்படுத்தி வருவதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இந்த 5 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரச வாகனங்கள், அரச ஊழியர்கள்,அரச கட்டிடங்களை தமது பிரசாரங்களுக்காக பயன்படுத்தி வருகின்றன. அரச நிறுவனங்களுக்குள்ளே சென்று இந்த கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

முடிவடைந்த காலப்பகுதியில் 14 அரச நிறுவனங்களில் புதிதாக நியமனங்கள், பதவி உயர்வுகளை வழங்கவும் இடமாற்றங்களை செய்யவும் முயற்சிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கு கிடைத்ததை அடுத்து இந்த முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கொண்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபையின் ஆட்சியை தன்வசம் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

(riz)