தமிழ் தமிழீழம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது – மாவை சேனாதிராஜா

தனியான சிங்கள தேசத்தினை உருவாக்குவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகளை முன்னைப்போடு செயற்படுவார்களேயானால், தனித் தமிழீழம் உருவாகுவதையும் யாராலும் தடுக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு

கூறியுள்ளார்.

மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளதாவது, “தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல்வாதிகளான விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன போன்றவர்கள் இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படுவதுடன், கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் சிங்கள மக்கள் சிங்கக் கொடிகளை ஏந்திக்கொண்டு சிங்கள தேசத்தை உருவாக்க வேண்டுமென விமல் வீரவன்ச கூறியிருந்தார்.

தனி சிங்கள தேசத்தை உருவாக்குவதற்கு அவர்கள் முயற்சித்தால் தமிழர்களின் பிரதேசத்தில் தனி தமிழ் இராச்சியமொன்று உருவாவதற்கு வழியாக அமைந்து விடும். இவ்வாறு உருவாக்கப்படும் தனி இராச்சியத்துக்கு சர்வதேசத்தின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு தாம் வேலை செய்வோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன் வெளியிட்ட விசாரணை அறிக்கையில் சர்வதேச விசாரணை என்ற விடயம் குறிப்பிடப்பட்டிருக்காவிட்டாலும், சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசேட கலப்பு நீதிமன்றம் என்ற பதம் ஓரளவுக்கு திருப்தி தரும் விடயமாக அமைந்தது.

இருந்தபோதும் இறுதியில் இலங்கையின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணையில் கலப்பு நீதிமன்றம் பற்றியோ அல்லது தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள படைகளை நீக்குவது பற்றியோ எதுவும் உள்ளடக்கப்படவில்லை.

ஹூசைனின் அறிக்கையை நாம் வரவேற்றிருந்தோம். இதில் பல சங்கடங்கள் இருந்தாலும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றதொரு நம்பிக்கை இருந்தது. இவ்வாறான நிலையில் தற்பொழுது நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணையில் ‘நிலைமாற்று கால நீதி’ (ட்ரான்சிஷனல் ஜஸ்டிஸ்) என்ற பதமே ஓரளவுக்கேனும் நம்பிக்கையை தருகிறது.

குற்றஞ்செய்தவர்கள் தண்டிக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்ற விடயம் வரவேற்கக் கூடியதாகவுள்ளது. அதேநேரம், உள்ளகப் பொறிமுறையொன்றின் மூலமே விசாரணைகள் நடத்தப்படும் என்ற கருத்துப்பட பலர் கூறி வருகின்றனர்.

விசாரணைப் பொறிமுறை எதுவாகவிருந்தாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய நீதிபதிகளை உள்ளடக்கிய பொறி முறையையே நாமும் தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்வோம்.

பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நம்பிக்கை தராத எந்தவொரு விசாரணைப் பொறிமுறை யையும் நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தல் ஆகியவற்றில் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர்.

தமிழர்களின் இனப் பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை வழங்கவேண்டிய கடப்பாடு இந்த அரசாங்கத்துக்கு உள்ளது.” என்றுள்ளார்.