தற்காலிக ஜனாதிபதியாக ரணில் பதவியேற்கலாம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும்வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாக ஜனாதிபதியாக  பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என  தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தில் நேற்றையதினம் கையொப்பமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை சபாநாயகர் நாளையதினம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, கோட்டாபய ராஜபக்சவின் ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடையும் அறிவிப்பை நாளை வெளியிடுவார்.

எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தினால் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாக ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பின் ஏற்பாட்டில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் ஜூலை 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனு தாக்கல் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறும் என்றும் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.