தற்போதைய அரச கொள்கைகளுக்கு அமைவாகவே நபரொருவருக்கு பாதுகாப்பு – பாதுகாப்பு செயலாளர்

இராணுவ பாதுகாப்பை நீக்க வேண்டாம் என, கோட்டாபய ராஜபக்ஷ இதுவரை எழுத்து மூல கோரிக்கைகள் எதனையும் முன்வைக்கவில்லை என, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ தமது பாதுகாப்பு குறித்து ஊடகங்கள் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், பாதுகாப்பு செயலாளரான தன்னிடம் இது தொடர்பில் எழுத்து மூல வேண்டுகோள் எதுவும் முன்வைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்,“தற்போதைய அரசாங்கத்தினால் பின்பற்றப்படுகின்ற கொள்கைகளுக்கு அமைவாகவே,  நபரொருவருக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கப்படும்” என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

தனக்கு இராணுவப் பாதுகாப்பை தொடர்ந்தும் வழங்குமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கோரிக்கை விடுத்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.