கைப்பற்றப்பட்ட உடற்பாகங்கள் குறித்து பொறுப்புச் சொல்ல மாட்டோம் – SAITM திட்டவட்ட அறிவிப்பு..

மாலபே சைட்டம் தனியார் நிறுவனத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட உடற்பாகங்கள் தொடர்பிலான தீர்மானங்களுக்கு தாம் ஒருபோதும் பொறுப்புச் சொல்ல மாட்டோம் என அந்நிறுவனத்தின் பிரதம அதிகாரி டாக்டர் நெவில் பிரணாந்து திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மாலபே சைட்டம் வைத்திய கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த உடற்பாகங்கள், சில நாட்களுக்கு முன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் எடுத்துச் செல்லப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் எடுத்துச் செல்லப்பட்ட அந்த உடற்பாகங்கள் அடங்கிய பெட்டியில் சைட்டம் நிறுவனத்தின் முத்திரைகள் காணப்படவில்லை. சி.ஐ.டி. யினரின் முத்திரைகள் மாத்திரமே அதில் காணப்படுகின்றன.

மர்மமான முறையில் மரணமடைந்துள்ள வஸீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் என சந்தேகத்தின் பேரில் சைட்டம் நிறுவனத்திலிருந்து உடற்பாகங்களை எடுத்துச் சென்ற விதம் தொடர்பில் எமக்கு திருப்திப்பட முடியாது. இவ்வாறு சந்தேகத்துக்கிடமான விசாரணைகளை மேற்கொள்ள எடுத்துச் செல்லும் பொருட்களில் இரு தரப்பினரதும் முத்திரைகள் இடப்படல் வேண்டும்.

சி.ஐ.டி.யினரின் இந்நடவடிக்கையில் எமக்கு சந்தேகம் உள்ளது. இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் பெட்டியை இரகசியமாக திறந்து அவர்களுக்குத் தேவையானதையும் பெட்டியினுள் இடலாம்.

நாம் அன்று தொடக்கம் இன்று வரை விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம். அன்று எமது நிறுவனத்திலிருந்து எடுத்துச் சென்ற உடற்பாகங்களுக்கு எமக்குப் பொறுப்புச் சொல்ல முடியாது. அவை சட்டரீதியாக எடுத்துச் சென்றிருந்தால் எமக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லையெனவும் நேற்று(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் டாக்டர் மேலும் தெரிவித்துள்ளார்.