பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டு ஒரு வாரம் கடக்க முன்னர் குறித்த மரணம் விபத்தல்ல என சந்தேகப்படுவதாக தெரிவித்து அப்போதைய பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோனுக்கு இரகசிய அறிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கொழும்பு குற்றவியல் பிரிவில் அப்போதைய பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி டி.ஆர்.எல். ரணவீரவுக்கு பொலிஸ்மா அதிபர் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு குறித்த அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
வஸீம் தாஜுதீன் மரணம் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு எந்த விசரணைகளையும் மேற்கொள்ள வழங்கப்படவில்லை. எனினும் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பேரில் அவருக்கு இரகசிய அறிக்கை வழங்க கொழும்பு குற்றவியல் பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வஸீம் தாஜுதீன் மரணம் சந்தேகத்துக்கிடமானது என கொழும்பு குற்றவியல் பிரிவு இரகசிய அறிக்கை மூலம் பொலிஸ்மா அதிபருக்கு தெரிவித்திருந்த போதிலும் 2015ம் ஆண்டு அரசாங்கம் மாறும் வரை குறித்த விசாரணைகளை இரகசிய பொலிஸாருக்கு வழங்கி முறைப்படி விசாரணைகள் மேற்கொள்ளாமை சிக்கலுக்குரிய விடயம் என விசாரணைகளின் பின்னர் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் காலத்தில் தேவையான ஆலோசனைகளை பெற்று முன்னாள் பொலிஸ்மா அதிபரிடம் விசாரணைகளை மேற்கொள்ள குற்றவியல் விசாரணைப் பிரிவு தயாராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.