தாஜூதீனின் கொலை – ஆனந்த சமரசேகர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு..

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி, முன்னாள் சட்டவைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை, அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனு இன்று(25) பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் மற்றும் நீதியரசர் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வஸீம் தாஜூதீனின் உடற்பாகங்கள் சில காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அது தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தம்மை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டே ஆனந்த சமரசேகர மனுத்தாக்கல் செய்திருந்தார்.

வஸீம் தாஜூதீனின் மரண விசாரணையை அப்போதைய சட்டவைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவே முன்னெடுத்திருந்தார். அந்தவகையில் மரண விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை என தெரிவித்து, அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.