இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் லஹிரு திரிமன்னே கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமாக விலகி ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும் என இலங்கை கிரிக்கெட் ஏ அணியின் பயிற்சியாளர் அவிஷ்க குணவர்தனே தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் – ஏ அணிக்கு எதிரான போட்டியில் சரியாக விளையாடாத திரிமன்னே ஆறு இன்னிங்ஸில் மொத்தமே 59 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து விமர்சனத்துக்கு உள்ளானார்.
இந்நிலையில் இலங்கை ஏ அணியின் பயிற்சியாளர் குணவர்தனே இது சம்மந்தமாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் கூறுகையில், எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு கடினமான நேரம் வரும். அது தற்போது திரிமன்னேவுக்கு வந்திருப்பதாக கருதுகிறேன்.
2014 ஆண்டிலிருந்தே அவரின் பேட்டிங் சொல்லி கொள்ளும் விதத்தில் அமையவில்லை. இந்த மூன்று வருடத்தில் அவர் இரண்டு முறை மட்டுமே 50 ஓட்டங்களை ஒரே இன்னிங்ஸில் கடந்துள்ளார்.
திரிமன்னே தனது மனதையும் உடலையும் ரிலாக்சாக வைத்து கொள்ள வேண்டிய நேரமிது என தெரிவித்த குணவர்தனே, அவர் தற்காலிகமாக ஓய்வெடுத்து கொண்டு மீண்டும் களத்துக்கு புத்துணர்ச்சியோடு வர வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், தான் திரிமன்னேவை விமர்சனம் செய்யவில்லை மற்றும் அவர் ஒரு திறமையான துடுப்பாட்ட வீரர் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை எனவும் குணவர்தனே மேலும் தெரிவித்துள்ளார்.