திலினி பிரசுரித்த புகைப்படங்களை வரவேற்ற ஹிருனிக்கா!!!

மரண தண்டனைக்கைதியான தமது சகோதரன் துமிந்த சில்வாவின் தலை சத்திரசிகிச்சை தொடர்பான புகைப்படங்களை அவரது சகோதரி பிரசுரித்துள்ளமையை, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர வரவேற்றுள்ளார்.

தமது தந்தையை துமிந்த சில்வாவே துப்பாக்கியால் சுட்டார் என்று குற்றம் சுமத்திவந்த ஹிருனிக்கா, இந்த வழக்கில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை கிடைத்த நிலையில் தமது தந்தையின் தலையில் துப்பாக்கி சன்னம் பாய்ந்திருந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் துமிந்த சில்வாவுக்கும் தலையில் துப்பாக்கி சன்னம் பாய்ந்திருந்தால், அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பியிருந்தார்.

இதனையடுத்தே துமிந்த சில்வாவின் சகோதரி திலினி தமது சகோதரன் சத்திரசிகிச்சைக்கு உள்ளானதாக கூறப்படும் புகைப்படங்களை பிரசுரித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள ஹிருனிக்கா, துமிந்த சில்வாவின் ஆரோக்கிய நிலையை பார்க்கின்றபோது அவருக்கு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சத்திரசிகிச்சை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே அவருடைய மருத்துவ சான்றிதழ் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் ஹிருனிக்கா தெரிவித்துள்ளார்

அதேநேரம் அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர் தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் தமது தந்தையின் கொலைக்கு உரியநீதி கிடைத்தமை போன்று இந்த விடயத்திலும் உண்மை ஒருநாள் வெளியாகும் என்று ஹிருனிக்கா தெரிவித்துள்ளார்.