தீவிரவாதிகள் இருந்த பகுதியில் இந்தியா தாக்குதல் – அத்து மீறுவோரை சுட்டுத்தள்ள மோடி பணிப்பு..

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா இராணுவ கட்டுப்பாட்டு நடவடிக்கை இயக்குநர், ஜெனரல் ரன்பீர்சிங் இன்று அறிவித்தார்.

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் நிலவி வரும் பதட்டமான சூழலில், பிரதமர் மோடி பாதுகாப்பு தொடர்பான உயர் மட்டக் குழுவில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

காஷ்மீர் மாநிலம் யூரியில் இராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 18 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, எல்லையில் இந்திய துருப்புகள் எச்சரிக்கையாக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்து மீறுவோரை சுட்டுத்தள்ளுங்கள் என பிரதமர் மோடி நேரிடையாக அறிவுறுத்தினார். கடந்த வாரத்தில் பிரதமர் மோடி முப்படை வீரர்களுடன் இரகசிய ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என ஐ.நா உரையில் உலக நாடுகளுக்கு சுஷ்மா வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி, பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டத்தை இன்று காலை 11 மணியளவில் கூட்டினார். ஜவஹர்லால் நேரு பவனில் நடந்த இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் மற்றும் இராணுவ தளபதிகள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் ஜெனரல் ரன்பீர்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:

யூரி மற்றும் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது முதல் இராணுவ நடவடிக்கையை கடுமையாக எடுத்து வருகிறோம். எல்லையில் 20 ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் எல்லையில் 3 முறை பாகிஸ்தான் அத்துமீறலை நடத்தியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான தாக்குததை பொறுத்துக்கொள்ள மாட்டோம். பயங்கரவாதத்தை முழுமையாக அழிப்போம்.

உளவுத்துறை அளித்த தகவலின்படி, பயங்கரவாதிகள் முகாமிட்டிருந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நேற்று இரவு, இந்திய இராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம். இதற்கு மேல் முழு விவரங்களை தெரிவிக்க முடியாது. எந்த தாக்குதலையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.