பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் எலும்புகள், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவகத்தில் (சைட்டம்) இருந்து மீட்கப்பட்டன என்று தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் (ஜே.வி.பி)அநுர குமார திஸாநாயக்க, “இது போன்ற கீழ்த்தரமான வேலைகளைச் செய்கின்ற இந்நிறுவனம், இந்தத் துப்பாகிச்சூட்டு நாடகத்தையும் நடத்தி இருக்கலாம் என, நம்பத்தோன்றுகின்றது” என்று கூறினார்.
ஜே.வி.பி தலைமையகத்தில், நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர்,
”பொய்யான ஆவணங்களைக் காட்டி மக்களை ஏமாற்றி ஆரம்பித்த இந்நிறுவனம் தற்போது துப்பாகிச்சூடு நடத்தியதாகக் கூறிக்கொண்டு வருகிறது.
“சைட்டம் நிறுவனம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவு பிரபிக்கப்பட்ட பின்னர் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. எனவே இந்த ஆர்ப்பாட்டங்களைக் காரணம்காட்டி, இவ்வாறு ஒரு விடயத்தை அவர்களே செய்து இருக்கலாம் என சந்தேகப்படுகின்றோம்.
அதனால் இது தொடர்பாக விசாரணையை மிக விரைவாக ஆரம்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், நாடாளுமன்றத்தில், வைத்துக் கோரினோம்.
“சைட்டம் பிரதம நிறைவேற்று அதிகாரியான டொக்டர் சமீர சேனாரத்ன, வைத்திய சபையில் பதிவுசெய்யப்படாத ஒரு வைத்தியர். ரஷ்ய நாட்டில் படித்ததாகக் கூறுகிறார். ஆனால், அவர் பல முறை வைத்திய பரீட்சையில் சித்தியடையத் தவறியுள்ளமையை நாங்கள் அறிவோம்” என்றார் –