துமிந்த சில்வா நிரபராதி என ஜனாதிபதி சட்டத்தரணிகள் நிரூபிப்பு – விடுதலையாவாரா..?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சட்டபூர்வமானது அல்ல என, ஜனாதிபதி சட்டத்தரணிகள் நேற்று(10) உயர்நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளனர்.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த தீர்ப்பு, துமிந்த சில்வாவை குற்றவாளியாக மாற்றுவதற்காக முன்வைக்கப்பட்ட சகல சாட்சியங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணானது என்றும் எந்தவொரு சாட்சியாளரதும் சாட்சி நூறு வீதம் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை நிரபராதியாக்கி விடுதலை செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு நான்காவது நாளாக நேற்று(10) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, விளக்கமளித்த ஜனாதிபதி சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன குறித்த வாதத்தினை முன்வைத்துள்ளார்.

எவ்வாறாயினும் மாறுப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில் நபர் ஒருவரை குற்றவாளியாக ஆக்கும் போது அவதானமாக இருக்க வேண்டும் என இதற்கு முந்திய வழக்கு தீர்ப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் ஜனாதிபதி சட்டத்தரணி இதன்போது சுட்டிக்காட்டினார்.

துப்பாக்கியை பயன்படுத்தியதாக துமிந்த சில்வா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான எந்த சாட்சியும் வழக்கு விசாரணையின் போது முன்வைக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி இதன்போது உயர்நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம், பாரத லக்ஸ்மன் தரப்பினரால் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், தீர்ப்பு வழங்கலின் போது அது கருத்திற்கொள்ளப்படவில்லை என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டியிருந்தார்.

போலியாக சித்தரிக்கப்பட்ட சம்பவம் மற்றும் சாட்சியை அடிப்படையாக கொண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சார்பில் முன்னிலையான தரப்பினர் முன்வைத்த விடயங்கள் மற்றும் சமர்பனங்கள் கருத்திற்கொள்ளாது மேல் நீதிமன்ற வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளதாக உயர் நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக சட்டதிற்கு முரணாக தண்டனை வழங்கி விடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பை ரத்து செய்து சகல குற்றங்களில் இருந்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை நிரபராதியாக்கி விடுதலை செய்யுமாறும் ஜனாதிபதி சட்டதரணி அணில் சில்வா உயர் நீதிமன்றத்தை கோரியிருந்தார்.

மேன்முறையீட்டின் மேலதிக விசாரணை எதிர்வரும் 14 ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.